தேர்தல் ஆணையமே! முடிவை மாற்றிக்கொள்!

  பா.ச.க.வின் கைப்பாவையாக இந்தியத் தேர்தல்ஆணையம் செயல்படுவது அனைவரும் அறிந்ததே! இதன் காரணமாகத் தமிழ்நாட்டின்  ஆட்சியில் தடுமாற்றமும் தமிழக அரசியலில் குழப்பமும் ஏற்பட்டுள்ளன. கட்சிகளில் பிளவு என்பது ஒன்றும் புதியதல்ல. ஆனால், கட்சியின் தலைமையை முடிவு செய்பவர்களாக மக்கள்தாம் இருந்துள்ளார்கள்! தேர்தல் ஆணையம் அல்ல! பேராய(காங்கிரசு)க் கட்சியில் பிளவு பட்ட பொழுது இந்திரா காந்தியின் தலைமைக்கு  ஏற்பளித்தவர்கள் மக்கள்தாம், தேர்தல் ஆணையம் அல்ல!
  தி.மு.க.வில் பிளவு வந்தபொழுது அதிமுகவிற்கு ஏற்பளித்தவர்களும் மக்கள்தாம்! தேர்தல் ஆணையம் அல்ல! தி.மு.க.வில் வைகோ நீக்கத்தால் கட்சி உடைந்த பொழுது தி.மு.க.வின்பக்கம் ஏற்பை வழங்கியவர்கள் மக்கள்தானே தவிரத் தேர்தல் ஆணையமல்ல. பிற மாநிலக் கட்சிப்பிளவுகளுக்கும் இது பொருந்தும்.
  தேர்தல் ஆணையத்தின் அதிகார  வரம்பிற்குள் வரக்கூடாத இது வந்து விட்டது. அப்பொழுதும் உ.பி.யில் தந்தை மகன் பிரிந்து பட்டு நின்ற பொழுது தேர்தல் ஆணையம்,  மக்கள்ஆதரவு யார் பக்கம் என ஊகத்தின் பெயரிலோ ஊடகத்தின் இட்டுக்கட்டிலோ சிக்காமல் பொறுப்பாளர்கள் யார் பக்கம் நின்றார்களோ அவர்பக்கம்தான் தீர்ப்பு வழங்கியது.
  தமிழ்நாட்டில் மாறுபட்டநி்லைமைக்குக் காரணம்,  தேர்தல் ஆணையம் பா.ச.க.வின் கட்டுப்பாட்டிற்குள் வந்ததுதான் என்பது வெள்ளிடை மலை. இது குறித்த செய்திகள்  வந்த பின்னரும் தேர்தல் ஆணையர்கள் வெட்கப்படவில்லை!
  தேர்தல் ஆணையம் குறுக்கிட்டிருக்காவிட்டால் இராதாகிருட்டிணன் நகர் இடைத் தேர்தல் நடந்திருக்கும். இரட்டை இலையைப்பறித்தும் தொப்பி செல்வாக்கு பெற்றிருக்கும்! தினகரன் வெற்றி பெற்றிருப்பார்!  ஆனால், பா.ச.க. கலங்கியிருக்கும்.  இதனைத் தாங்கிக் கொள்ள அடிமைகளுக்கு மனமிருந்திருக்காதே!  ஆனால், தமிழக அரசு தடுமாற்றத்தில் சிக்கியிராது.
  தேர்தல் ஆணையம் கடமையைச் சரியாகச் செய்து அத்து மீறலை  அரங்கேற்றியிருக்காவிட்டால், பொதுத்தேர்தலில் அ.தி.மு.. வெற்றி வாய்ப்பை இழந்திருக்க வாய்ப்புண்டு! ஆனால் அப்பொழுது வெற்றிக்கனியைத்தி.மு.க.தானே சுவைத்திருக்கும்! பா.ச.க அல்லவே!
  ஒரு வேளை, ஈழத்தமிழர் படுகொலைகளுக்குக் காரணமான தி.மு.க.-பேராய(காங்.)கூட்டணி வெறுப்பு; செயலலிதாவின் வழி எனச் சொல்லிக் கொண்டாலும் அவருக்கு மாறாகக் காட்சிக்கு எளிமை, இதனால், கோப்புகளில் தேக்கமின்மை, திட்டங்களில் சுறுசுறுப்பு போன்றவற்றால் அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியைத் தொடர்ந்திருக்கும். அப்பொழுதும் பா.ச.க.விற்குப் பயனில்லையே!
 தமிழ்நாட்டு முதன்மைக் கட்சியினரை  மிரட்டியும் ஒடுக்கியும்  மறைமுக ஆட்சி புரியவும் முறையற்ற பேரத்தால் கணிசமான தொகுதிகளைப் பெற்றுச் சட்ட மன்றத்தில் நுழையவும் பா.ச.க. கச்சிதமாகத் திட்டமிட்டுச் செயல்படுகிறது. அதற்கு மத்திய அரசின் துறைகளைப் பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையமும் அதற்குத் துணைபுரிகிறது.
  பா.ச.க.வின் குறுக்கு முயற்சிகள் அதனைச் சரிவுப்பாதையில்தான் தள்ளும். அதன்  அசைவிற்கெல்லாம் தேர்தல் ஆணையம் ஆடுவது சரியல்ல.
    ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
    ஊக்கார் அறிவுடை யார். (திருவள்ளுவர், திருக்குறள் 463)
என்பது உலகப் பொது நெறி!
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்!
 என்கிறார் புரட்சிப்புலவர் பாரதியார்.
அது மட்டுமல்ல! அதிகாரத்தைப் பயன்படுத்தி வஞ்சகம் புரிபவர்கள்
நலிந்து போவார்கள்! நாசமாய்ப் போவார்கள்!
நாதியற்றுப் போவார்கள்! நரகத்திற்குப் போவார்கள்!
என்பது  அறவோர் கருத்து.
இவற்றைத் தேர்தல்  ஆணையத்திற்கு யாரும் எடுத்துச் சொன்னால் நன்று.
  தேர்தல் ஆணையம் தான் செய்த தவற்றைத் திருத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இப்பொழுது அ.தி.மு.க.வின் பெரும்பான்மை அணியினரும் மீச்சிறுபான்மை எண்ணிக்கையினரும் ஆவணப்பத்திரங்களை அளிப்பதாக நூறாயிரக் கணக்கில் பத்திரங்களை அளித்து வருகிறார்கள். பொதுவாகவே தேர்தல் வழக்கு என்று வந்தாலே மறு தேர்தல் வரையும் தீர்ப்பு வராமையே நம் நாட்டு வழக்கம். ஆனால், இந் நேர்வில் வாணாள் முடிவதற்குள் தீர்ப்பு சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. எனவே, ஒவ்வோர் ஆவணத்தையும் சரியார்ப்பதற்குப் போதிய வாய்ப்பு இல்லை என்பதை ஒப்புக்கொண்டு இப்போதைய நிலையே தொடரட்டும்! மக்கள் தேர்தல் மூலம்உரிய நடவடிக்கை எடுக்கட்டும் என்று அறிவித்தால் போதும்.
 ஆவணங்களைச் சரிபார்க்கவும், தொடர்பாக இனி வரும் முறையீடுகளை உசாவவும் இப்பணிகளை மட்டுமே பார்க்கத்தான் தேர்தல் ஆணையத்திற்கு நேரமிருக்குமே  தவிரப் பிற வேலைகளைப் பார்க்க இயலாது எனக் கூறித் தேர்தல் ஆணையம் ஒதுங்கிக் கொள்வது அதற்கும் நல்லது! நாட்டிற்கும் நல்லது! தன்னைத் திருத்திக் கொள்ள நல்வாய்ப்பாகக் கருதித் தேர்தல் ஆணையம், மக்களாட்சியின் மாண்பைக் காக்கட்டும்!
இலக்குவனார் திருவள்ளுவன்