தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்கச் செய்ய வேண்டுவன


  1. தமிழ்ப்பயிற்றுமொழியை வலியுறுத்தும் கட்சியினரும் அமைப்பினரும் தலைவர்களும் ஆர்வலர்களும் தங்கள் குடும்பத்தினரைத் தமிழ்வழிக் கல்விக்கூடங்களிலேயே சேர்க்க வேண்டும்.
  2. தரமான தமிழ்வழிப்பள்ளிக்கூடம் இன்மையால் தமிழ்வழிக்கல்வி அளிக்க இயலவில்லை என்னும் குறைபாட்டைப் போக்கவேண்டும். எனவே, ஊராட்சி தோறும் தமிழ்வழிக்கல்விக்கூடங்களைத்தொடங்க வேண்டும்.
  3. அரசு மூடிவரும் உள்ளாட்சி அமைப்புகளின் தமிழ்வழிக்கல்விக்கூடங்களை எடுத்துச் சிறப்பாக நடத்த வேண்டும்.
  4. தமிழ்வழிப்பள்ளிகளைத் தத்து எடுத்துத் தரம் உயர்ந்தனவாக மாற்ற வேண்டும்.
  5. தாங்கள் நடத்தும் ஆங்கிலக் கல்வி நிலையங்களைத் தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்ற வேண்டும்.
  6. தமிழ்வழிக்கல்விக்கு எதிரானவர்களைப் பொறுப்புகளிலிருந்து நீக்க வேண்டும்.
  7. தாங்கள் நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தி, சமற்கிருதம்ஆகியன மொழிப்பாடங்களாக இருப்பின் அவற்றை நீக்க வேண்டும்.
  8. தங்களின் கல்விக்கூடங்கள், தத்து எடுக்கும் கல்விக்கூடங்கள் அனைத்திலும் தமிழ் மொழி, பாடமாக இருக்கச் செய்ய வேண்டும்.
  9. தங்களது நிறுவனங்களில் தமிழ்வழிக்கல்வி கற்றவர்களுக்கு முதலுரிமை அளிக்க வேண்டும்.
  10. இதுவரை தமிழ் எனப்பேசிக்கொண்டு, தமிழ்வழிக்கல்விக்கு எதிராக நடந்துகொண்டமைக்கு மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு வேட்க வேண்டும்.
  11. தமிழ்வழிக்கல்வியில் பயின்றவர்களுக்கும் தமிழ் வழிக்கல்வியை ஊக்கப்படுத்துபவர்களுக்கும்மட்டுமே வேட்பாளர் வாய்ப்பு அளிக்க வேண்டும்.
  12. தங்களது நிறுவனங்களில் பணியாற்றுவோர் தமிழிலேயே பேசுமாறு செய்ய வேண்டும்.
  13. தங்களது நிறுவனங்கள் அனைத்திலும் பெயர்ப்பலகைகள், அலுவலகப் பதிவேடுகள், மடல் போக்குவரத்து என அனைத்து நிலைகளிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்குமாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  14. அம்மன்கோயில்கள் முதலான சிற்றூர்க்கோயில்களிலும் பிராமணப் பூசாரிகள் புகுந்துகொண்டு சமற்கிருத வழிபாடு திணிக்கப்பட்டு வருகிறது. அனைத்துக்கோயில்களிலும் இவர்களை அகற்றி முன்பிருந்த தமிழ்ப்பூசாரிகளையே அமர்த்த ஆவன செய்ய வேண்டும்.
  15. தாங்கள் அல்லது தத்தம் கட்சியினர், அமைப்பினர் பொறுப்பில் உள்ள கோயில்களில் தமிழ்வழிபாடு இருப்பதை உறுதி செய்ய  வேண்டும்.,
  16. தமிழ்வழிபாடு இல்லாத கோயில்களில் உண்டியல்களிலோ, பூசாரிகளின் தட்டுகளிலோ பணம்போடக்கூடாது என்பதை நடைமுறைப்டுத்த வேண்டும்.
  17. தமிழ்வழிபாடு இல்லாக் கோயில்நிகழ்ச்சிகள், விழாக்களில் பங்கெடுப்பது, நன்கொடை அளிப்பது, உதவி செய்வது முதலானவற்றை உடனே நிறுத்த வேண்டும்.
  18. தமிழினப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் திட்டமிட்டது போன்ற தமிழ் உரிமைப்பெருநடைப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே தமிழ் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  19. தங்களைச் சார்ந்த கலைஞர்கள் எடுக்கும் திரைப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், குறும்படங்கள் என அனைத்திலும் பெயர், காட்சி அமைப்புகள், கதைக்களம் முதலிய அனைத்திலும் தமிழே,தமிழ்ப்பண்பாடே, தமிழ்க்கலையே மேலோங்கி யிருக்க வலியுறுத்த வேண்டும்.
  1. தாங்கள்நடத்தும் இதழ்கள், தொலைக்காட்சி முதலான ஊடகங்கள் வாயிலாகத் திருத்தமான தமிழுக்கு முதன்மை அளிக்க வேண்டும்.
  2. உயர்கல்விப் பாடநூல் வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும். அதன் மூலம் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தித் தமிழில் நூல்கள் உருவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை அச்சிட்டுக் குறைவான விலையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
  3. தனியார் பள்ளியாயினும் மத்திய அரசின் பள்ளியாயினும், பன்னாட்டுப் பள்ளியாயினும் தமிழுக்கு இடம் தராத கல்விக்கூடங்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை உருவாக்க வேண்டும்.
  4. தங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்தில் தமிழையே பயன்படுத்துவதை நடைமுறை ஆக்க வேண்டும்.
  5. தமிழ் என வாயளவில் முழங்காமல் உண்மையிலேயே தமிழுக்காகக் குரல் கொடுப்பவர்களாயின் தமிழைப் பயன்பாட்டு மொழியாகத் தத்தமிடங்களில் இருந்து தொடங்க வேண்டும்

 பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின்
திட்டமிட்டு அழிக்கப்படும் தமிழைக்காக்க வழிகாண வாரீர்!
என்னும் தலைப்பிலான கலந்தாய்வுக்கூட்டம்
இன்று (பங்குனி 13 2048 /  மார்ச்சு26, 2017) நண்பகல் நடைபெற்றது.

இக்கலந்தாய்வில் மேற்குறித்த கருத்துகளை முன்வைத்தேன்.
   இந்நிகழ்வைக் கலந்தாய்வாக இல்லாமல் சொற்பொழிவு அரங்கமாக   மேடையிலிருந்த ஆன்றோர் மாற்றிவிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தவறுதான் இது. இதனால்கலந்தாய்வில் பங்கேற்க  வந்த ஆர்வலர்கள் பிற்பகல் 2.30 மணிக்குத் தங்கள் கருத்துகளை ஒருவரியில் தெரிவிக்க இசைவளிக்கப்பட்டனர். எனவே, அடுத்து வரும் கலந்தாய்வுகளில்  பொது மக்களுக்கு முதலில் கருத்துகூற வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தேன்.

 – இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம்
  பேசி 99884481652  மனை பேசி 04422421759