தலைப்பு-சிறை, தாக்குதல், உயிர்போக்குதல், திரு ;thalaippu_siraiyillthaakkuthal_uyirpoakkuthal_ila-thiruvalluvan

சிறையில் தாக்குதலும் உயிர்போக்குதலும்

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை(திருவள்ளுவர், திருக்குறள் 541).
  மணிமேகலை வகுத்தாற்போல் சிறைக்கோட்டங்களை அறக்கோட்டமாக ஆக்குவதைத் தமிழ்நாட்டு அரசாள்வோர் நெறியாகக் கொண்டனர் அன்று. சிறைக்கூடங்கைளக் கொலைக்கூடங்களாக மாற்றுகின்றனர் இன்று.
  சிறையில் தாக்குதல் அல்லது கலவரம் என்பது எல்லா நாட்டுச் சிறைச்சாலைகளிலும் அரங்கேறும் அவலம்தான். ஆனால், இவை பொதுவாக இரு குழுக்களிடையே அல்லது வெளியே உள்ள குழு ஒன்றின் தூண்டுதலால் நடைபெறுவதாகத்தான் இருக்கும். அல்லது சிறைச்சாலை அடக்கு முறைக்கு எதிராகச் சிறைவாசிகள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்பர். ஆனால்,  தமிழ்நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் தனி மனிதர் மீதான தாக்குதல்கள் நிகழ்கின்றன.
  நெருக்கடிநிலைக் காலத்தில் தி.மு..க., தி.க.சார்பாளர்களையும் தமிழன்பர்களையும் சிறைகளில் தாக்கியதும் பெரிதும்  கொடுமைப் படுத்தியதும்  வரலாற்றுக் கறை. இதன் பின்னர் இதற்கென  நீதிபதி இசுமாயில் ஆணையம் நிறுவி அவர் பரிந்துரைத்தபடி சீர்திருத்தநடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்தது. சில சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. என்றபோதும் எக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் காவல்துறையும் சிறைத்துறையும் அக் கட்சியாளர்களுக்குக் கை கட்டிப் பணிபுரிவது மட்டும் நிற்கவில்லை.  இதன் காரணமாகவே அரசிற்கு எதிரானவர்கள் எனப்படுவோர் சிறைகளில் தாக்கப்படுவது தொடர்கதையாகிறது.
  இவ்வாண்டில் சூலைத்திங்கள் பியூசு மனுசு என்னும் மக்கள் நலச் செயற்பாட்டாளர் சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்ட செய்தி வந்தது. பொதுவாக மக்களிடையே சிறைக்காவலர்க்கும் காவல்துறையினருக்கும் வேறுபாடு தெரிவதில்லை. அதுபோல் சிறைவாசிகள் அல்லது கைதிகளுக்கு வழிக்காவலாகச் செல்பவர்கள் ஆயுதப்படைக் காவலர்கள். ஆனாலும் எல்லாரும் நமக்குக் காவல்துறையினர்தாம். எனவே, பியூசு தாக்கப்பட்டது எந்தக் காவலர்களால் என்று தெரியவில்லை. எனினும் உயிரைப்பறிக்கும் வண்ணம் அவர் தாக்கப்பட்டது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
  விடுதலையை எதிர்நோக்கி மூச்சுவிட்டுக்கொண்டிருக்கும் பேரறிவாளனைச் சிறையில் தாக்கியதும் உள்நோக்கம் கொண்டது என்ற ஐயத்தை எழுப்புகின்றது. தொடர்பே இல்லா இருவரிடம் தனி மனிதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது எனில் வேறு பின்னணிதான் இருந்துள்ளது என்பது  தெளிவாகிறது. ஒரு முறை  ஈ.வெ.கி.ச. இளங்கோவன் எழுவர் விடுதலை தொடர்பான சார்பான நடவடிக்கையில் அரசு இயங்கிய பொழுது சிறைக்குள் சிறைவாசியாகச் சென்றேனும் அவர்களைக் கொல்லுவோம் எனப் பேசியதாகச் செய்தி  வந்தது. கடந்த முறை தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கும் வரை தி.மு.க.வை அவர் கடுமையாகத் தாக்கி வந்தவர்தான். (மனிதநேயமற்ற, எப்பொழுதும் தி.மு.க.வைக் கடுமையாகத் தாக்கி வந்த அவரும் தி.மு.க.வும் உறவு கொண்டாடுவது இரு தரப்பிலும்  வெட்கம் கெட்ட செயல்தான்.) எனவே, பேரறிவாளன் தாக்கப்பட்டதைக் கொலை முயற்சி வழக்காக முனைப்புடன் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் தொடர்பில் இளங்கோவனையும் அதுபோல் எழுவர் விடுதலைக்கு எதிராகப் பேசிவந்தவர்களையும் கைது செய்து விசாரணை செய்தால் உண்மை வெளியே வரும்.
  அரசிற்கு மேலும் களங்கம் ஏற்படுத்துவது அதற்கடுத்த வாரம் பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இராம்குமார் உயிர்பறிப்புக் கொடுமையாகும்.  இயல்பான மரணம் என்பதுபோல் முதலில் சிறைத்துறையினர் தெரிவித்த தகவலும் அடுத்து அவரின் தற்கொலை முயற்சியாகக் கூறப்பட்டதும், பின்னர், மருத்துவமனையில் உயிர் இழந்ததாகக் கூறுவதும்,  இப்போது  சிறைக்குச் செல்லும் வழியிலேயே உயிர் இழந்ததாகக் கூறுவதும் பொருந்தும்படியாக இல்லை எனத்தலைவர்களும் ஊடகத்தினரும்  வலைத்தளப் பதிவாளர்களும் கூறிவருகின்றனர். இவற்றுக்கு அரசு உரிய விளக்கத்தை அளிக்கவில்லை என்பதே உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றது.
  வீடுகளில்கூடச் சுவரில் புதையும் வகையில் மின் இணைப்பு இருக்கையில் புதியதாகக் கட்டப்பட்ட புழல் சிறைச்சாலையில்  மின்கம்பிகள் சுவருக்கு வெளியே தெரியும்படி இருப்பதாகக் கூறுவது பொய்யான தகவல் என மக்கள் தெரிவித்தனர். உடனே,  மின்விசைப்பெட்டியை உடைத்து மின்கம்பியைப் பல்லால் கடித்துத் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகின்றது. இராம்குமார் தலையாலோ வேறுவகையிலோ விசைஇணைப்பு மூடிப்பலகையை உடைத்து மின்கம்பியைப் பல்லால் கடித்தார் என்பது உண்மையெனில், அம்மூடி தெறித்த நிலையில் உடைந்தல்லவா இருக்க  வேண்டும்.  ஏதோ திருகாணியை முறையாகக் கழற்றி மூடியைத்  திறந்ததுபோல் அல்லவா இருக்கிறது.
  கொல்லப்பட்ட பொறி.சுவாதியின் குடும்பத்தார் செல்வாக்குமிக்க சாதிக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் கொலையாளி விவரமும் மறைக்கப்படுகின்றது. இப்பொழுது சுவாதி வழக்கும் இராம்குமார் வழக்கும் புதைக்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, அரசு நடுநிலை நடவடிக்கை எடுத்து உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.
  சிறைச்சாலைகளில் தாக்குதல்களுக்கும் உயிர் போக்குதல்களுக்கும் இடமில்லாத வகையில் செயலாற்றி அவற்றை மறுவாழ்வு இல்லங்களாக மாற்ற வேண்டும்.
  இல்லையேல் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உயிரைப்பறிப்பதையே வழக்கை முடிப்பதற்கு எளிய வழியாகக் கருதும் கொடுங்கோன்மை பரவும்; நீடிக்கும்.
  அறவழி நின்று இன்னாசெய்யாது ஆட்சி செய்வதே அரசிற்குப் பெருமை சேர்க்கும்; மேன்மை ஆக்கும்; நிலைத்த புகழ் தரும்.
    சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
    செய்யாமை மாசற்றார் கோள்(திருவள்ளுவர், திருக்குறள் 311).
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 153, புரட்டாசி 09, 2047 / செப்.25, 2016
அகரமுதல முழக்கப்படம்02 :Akaramuthala-Logo