தலைப்பு-பெயரைச்சொல்வது தவறல்ல-திரு : thalaippu_peyaraicholvathu_thavaralla_thiru

பெயரைச் சொல்வது தவறல்ல!

சொல்லாதிருப்பதே வரலாற்றுப்பிழை!

 நாம், அடைமொழிகள் சேர்த்து ஒருவரை அழைத்தாலோ அவருக்குரிய பட்டத்துடன் குறிப்பிட்டாலோதான் அவருக்கு மதிப்பளிப்பதாகத் தவறாகக் கருதுகிறோம். தமிழக அரசியலில் இது மிகவும்  மோசமான முறையில் உள்ளது. ஒருவர் உயர, உயர, மக்கள் பெயருடன்மட்டும் குறிப்பதுதான் பழக்கம். எனவேதான் நேரு, காந்தி, அண்ணா என்கின்றோம்.  ஆண்டவனையே பெயர் சொல்லி அழைக்கும் நாம்,  நாட்டை  ஆண்டவனை, ஆள்கின்றவனை அவ்வாறு பெயர் சொல்லிஅழைப்பது அவரைச் சிறுமைப்படுத்துவதாகத் தவறாகக் கருதுகிறோம். பெயரைச் சொல்லாமல் சிறப்புப்பெயரால் அழைப்பதையே உயர்வு எனவும் தவறாகக் கருதுகிறோம்.  ஆனால், இவ்வாறு நாம் அழைப்பதன் மூலம், யாரைச் சிறப்பிப்பதாகக் கருதுகிறோமோ அவரை வரலாற்றிலிருந்து நீக்கும் தவற்றைச் செய்கின்றோம் என்பதைஉணர்வதில்லை.
  கடல்கொண்ட தமிழ்நாட்டில் எஞ்சிய இலக்கியங்களைத் தொகுத்தனர். இவ்வாறு தொகுத்த சங்கப்பாடல்கள் சிலவற்றை இயற்றிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. எனவே, அவர்கள் பாடல்களில்  இடம்பெற்ற  சிறப்புத் தொடர்கள் மூலம் அவர்களை அழைத்தனர். இவ்வாறு அழைக்கப்பெறும் புலவர்களே,  அணிலாடு முன்றிலார், இரும்பிடர்த் தலையார், ஊட்டியார், ஊண்பித்தை, ஓரிற்பிச்சையார், ஓரேருழவர், கங்குல் வெள்ளத்தார், கவைமகன், கழாத்தலையார், கழைதின் யானையார், காமஞ்சேர் குளத்தார், காலெறி கடிகையார், குப்பைக் கோழியார், கூகைக் கோழியார், செம்புலப்பெயல்நீரார், தனிமகனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், தொடித்தலை விழுத்தண்டினார், நோய்பாடியார், பதடி வைகலார், மீனெறி தூண்டிலார், விட்டகுதிரையார் முதலானவர்கள் ஆவர். இவர்களின் இயற்பெயர்கள் தெரியாச் சூழலில் இவ்வாறு சிறப்புப்பெயர் சூட்டி அழைப்பது தவறல்ல. ஆனால், இயற்பெயர் மறையும் வகையில் சிறப்புப் பெயரால் அழைத்தால் இயற்பெயர் மறைந்துவிடும் சூழல் ஏற்படும்.
  ஒரு வேளை, திருவள்ளுவரின் இயற்பெயர் வேறாக இருந்திருப்பின் திருவள்ளுவர் என்னும் சிறப்புப்பெயரால் மட்டுமே குறிப்பிட்டதால் இயற்பெயர் மறைந்திருக்கும் வாய்ப்பு உண்டு.
  தொல்காப்பிய உரையாசிரியர்களில் ஒருவர் பெயர் பேராசிரியர் என்பதாகும். கல்வி ஒழுக்கங்களில் சிறந்து பெரும்புலமையுடன் உரையெழுதியமையால், பேராசிரியர் என்றே அழைக்கப்பெற்றுள்ளார். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக்கூறப்படும் இவர்  காலத்தில்தான்  காலிங்கர், பரிமேலழகர்,  பருமனார், தருமனார் முதலான உரையாசிரியர்கள் வாழ்ந்துள்ளனர்.  இவர் காலத்திற்கு முன்பே  மணக்குடவர்,  நீலகண்டனார், ஆத்திரையன் பேராசிரியர்பரிப்பெருமாள், குணசாகரர், இளம்பூரணர் எனப் பலரின் பெயர்களும்  தெரிய வருகையில் இவரது இயற்பெயர் மறைந்ததன் காரணம் இவர் காலத்திலேயே இவர் சிறப்புப்பெயரால் அழைக்கப்பெற்றமைதான். இவரைப்போலவே மேலும் நால்வர் பேராசிரியர் என்று அழைக்கப்பெற்று இயற்பெயர் மறைந்து  புகழால் வாழ்கின்றனர். சிலப்பதிகாரத்திற்கான உரை வளத்தால் சிறப்பு பெற்ற அரும்பதஉரையாசிரியர் முதலான பிறரின் பெயர்களும் தெரியாமல்போனதற்கு நூல்கள் அழிவுடன் இதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.
  நாம் பாரதியார் என்றால் சுப்பிரமணிய பாரதியாரைத்தான் எண்ணுவோம். ஆனால், ஒரே நேரத்தில்தான்  சுப்பிரமணியன் என்னும் கவிஞருக்கும் சோமசுந்தரம் என்னும் கவிஞருக்கும் பாரதியார் பட்டம் வழங்கப் பெற்றது. முன்னவர்  புரட்சிக்கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் என்றும் பின்னவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்றும் உலகில் புகழ்பெற்றனர். ஆனால் நாம்  முன்னவரைப் பாரதியார் என்று மட்டும்  குறித்துப் பயன்படுத்திவருவதால் அவரது உண்மைப்பெயரே பலருக்கும் தெரியாமல் போகின்றது. கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்டவர் தாமே பாரதி்தாசன் என்று புனைபெயர் வைத்துக்கொண்டமையால் அவரது இயற்பெயர் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. ஆனால், இயற்பெயருடன் அழைக்கப்பெற வேண்டியவர்களைச் சிறப்புப் பெயரால் மட்டும் அழைப்பதால், அவர்களுக்குரிய பெயர்களை வரலாற்றில்இருந்து நாமே அப்புறப்படுத்துகின்றோம் என்பதை உணரவில்லை.
  இதைத் தவிர்ப்பதற்குச் சிறப்புப்   பெயர்களுடன் இயற்பெயர்களையும் சேர்த்தே குறிப்பிடுவதை நாம் நடைமுறையாகக்கொள்ள வேண்டும்.
  கடந்த வாரம் சட்ட  மன்றத்தில் தி.மு.க.தலைவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டுப் பேசியதால் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  நீண்ட காலச் சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையிலும் முன்னாள் முதல்வர் என்ற முறையிலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்றோ தி.மு.க. தலைவர் கருணாநிதி என்றோ குறிப்பிட்டிருக்கலாம். அவர் பெயரைச்சொல்லிக் குறிப்பிட்டது கண்டு எதிர்க்கட்சியினர் வெகுண்டெழுந்திருக்கவும் தேவையில்லை. தங்கள் தலைவரின் புகழ் என்பது அவர் பெயரால் அவரைக் குறிப்பிடாததில்தான் அடங்கியிருப்பதாக எண்ணுகின்றனரா?  தமிழினப்பகைச்செயலைச் செய்யாமையால்தான் இருக்கி்ன்றது  என்பதை உணரவில்லையா? மிகுதியான படைப்பிற்கு உரிமையாளர் புகழ் அவரைப்பெயர் சொல்லிக் குறிப்பிட்டதும் நீஙகிவிடும் என்ற அறி்யாமை ஏன்?
 தங்கள் கட்சித்தலைவரை மதிப்புடன் அழைக்க விரும்புபவர் மாற்றுக்கட்சித் தலைவரையும் அவ்வாறு அழைப்பதுதானே முறை. முன்பு ஒரு முறை கலைஞர் கருணாநிதி முன்னரே ஒருவர் பெயரைக் குறிப்பிட்டுப்பேசியபொழுது  பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கலைஞர் கருணாநிதி, எனக்குப் பெற்றோர் இட்ட பெயரைச் சொல்லி யாரும் கூப்பிட்டதில்லை.  இவராவது அப்பெயரைக்  கூறுகிறாரே என் தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு பேசினார்.
  பொதுவாக ஒருவரை நாம்  ‘திரு’ என்று சேர்த்து அளிப்பதே போதுமானது. ஆனால், முனைவர், மருத்துவர், பொறிஞர் என்றெல்லாம் சேர்த்துக் குறிப்பிடும்பொழுது ‘திரு’ என்னும்  அடைமொழி தேவையில்லை.  அமைச்சர், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கான ‘மாண்புமிகு’ என்பது பதவிக்கே தவிர பெயர்களுக்கு முன் குறிப்பிடக்கூடாது. அஃதாவது மாண்புமிகு …. துறை அமைச்சர் இன்னார்   என்றுதான் குறிக்கவேண்டுமே தவிர, …. துறையமைச்சர் மாண்புமிகு இன்னார் எனக் குறிக்கக்கூடாது.  ஆனால், நடைமுறையில் பொதுமக்கள் பெயர்களுக்கு முன்னர் மாண்புமிகு என்பதைக் குறிப்பிடுகின்றனர். இந்தநேர்வில்,  மறுநாள் திமுக உறுப்பினர் துரைமுருகன் மாண்புமிகு தி.மு.க. தலைவர் எனக் குறிப்பிட்டால் போதும் என்பதை ஏற்று முதல்நாள்  பெயரால் மட்டும் அழைத்த அ.தி.மு.க. உறுப்பினர் செம்மலை அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். ( இருவரும் மேனாள் அமைச்சர்களே!) இந்த மாற்றத்திற்குப் பாராட்டு. இதற்குப் பின்னணியில் முதல்வரோ சட்ட மன்றத்தலைவரோ இருந்திருப்பின் அவர்களுக்கும் பாராட்டு.
  ஒருவரது சிறப்பை  அல்லது குறையை நாம் அழைக்கும் முறையால் மாற்றிவிட முடியாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
  கலைஞர்,  முத்தமிழறிஞர், தலைவர், என வெவ்வேறு காலக்கட்டங்களில் அழைக்கப்பெறுபவர் ஒருவர்தான், அவர்தான் கருணாநதி என்று வரலாறு சொல்ல வேண்டுமென்றால் கலைஞர் கருணாநதி என்பதுபோல் பெயரையும் இணைத்துச் சொல்ல வேண்டும். இது போல், புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, அம்மா என அழைக்கப்பெறுபவர் யாரென வரலாறு   உணர்த்த வேண்டும் என்றால்,    புரட்சித் தலைவி செயலலிதா என்று  பெயரையும் சேர்த்துத்தான் குறிக்க வேண்டும். ஊடகங்களில் பெயரைமட்டும் குறிப்பதையே நடைமுறை மரபாகப் பின்பற்றுகையில் சினம்வராதவர்களுக்குப் பிற இடங்களில்மட்டும் பெயரைக்குறிப்பிடுவதால் சினம்வரத் தேவையில்லை.
  இவ்வாறு பெயரைக்குறிப்பிடுவது மதிப்புக் குறைப்பல் என்றும் வரலாற்று உண்மையை நிலைக்கச் செய்யும் செயல் என்றும் அரசியலாளர்கள் உணர வேண்டும். 
 போலிப் புகழுரைகளாலோ காழ்ப்புணர்ச்சியுடன் கூறும் இகழுரைகளாலோ ஒருவரின் மதிப்பு அமையாது. அவர் காலத்தில் மேற்கொண்ட அறச்செயல்கள், நேர்மைப்பணிகள், நல்லொழுக்கப்பாங்கு முதலியவற்றால் அவர் காலத்திற்குப்பின் அவர் விட்டுச்செல்லும் பணி விளைவுகளாலும் அவற்றால் கிடைக்கும்  உண்மையான பெயராலும்தான் அமையும்.  எனவே வாழும் காலத்தில் பெயரைக்குறிப்பிடாமல் பட்டப்பெயரைக் குறிப்பதுதான் சிறப்பு என எண்ணாமல், பெயரையும் இணைத்துக்  குறிப்பிடுவதே சிறப்பு என உணர வேண்டுகிறோம்.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (திருவள்ளுவர்,திருக்குறள் 114)
 – இலக்குவனார் திருவள்ளுவன்