Friday, February 27, 2015

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!


delhi-constituency-mapdelhi-thilli

தில்லி வாக்காளர்களுக்குப் பாராட்டுகள்!

  தலைகால் புரியாமல் இருக்கும் நரேந்திரர், அகமது(பட்டேல்) முதலானவர்கள் தலையில் பாறாங்கல்லைப் போட்ட தில்லி வாக்காளர்களை நாம் பாராட்ட வேண்டும். ஆம் ஆத்மி என்னும் பாசக-காங். கலவைக் கட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக நாம் பாராட்டவில்லை. அதனைத் தேர்ந்தெடுப்பது தவிர அம்மக்களுக்கு வேறு வழியில்லை. ஆனால், பாசக வெற்றி பெற்றிருந்தால் இந்தியாவே தாங்கள்தான் என மாரடித்துக் கொண்டு உலகமெல்லாம் மாயத் தோற்றத்தை அதன் தலைவர்கள் உருவாக்கியிருப்பர்.   நரேந்திரர் பின்னால் இந்தியா இருப்பதாகவும் அதன் தலைவர் அகமது வினைத் திறம் வெற்றி கண்டதாகவும் கூறுவதுடன் நில்லாமல் இந்தியாவை ‘இந்து’யாவாக மாற்றத் தொடர்ந்து ஈடுபடுவர். “இந்தியாவின் தலைநகர் தந்த வெற்றி இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தந்த வெற்றி” எனத் தலைக்கனத்துடன் பேசியிருப்பர். மரண அடி பெற்றதும் “மாநிலத் தேர்தல் வேறு, மத்தியத் தேர்தல் வேறு” என இப்போது கூறிவரும் வாய்தான் வெற்றிபெற்றிருந்தால் மாறாகக் கூறியிருந்திருக்கும். அதற்கான வழி வகுக்காமல் வேரொடு வீழ்த்திய தில்லி வாக்காளர்களைப் பாராட்டுகிறோம்.
  அதே நேரம் மத்தியில் ஆளும் பொறுப்பில் உள்ள பாசக இத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு நல்லிணக்க அரசை நடத்தத் தவறினால் இந்தியா முழுமையும் பள்ளத்தில் விழநேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தித்திணிப்பையும் சமற்கிருத்திணிப்பையும் இந்து மயமாக்கலையும் வரலாற்றுத் திரிபையும் அடியோடு கைவிட்டு, வேறு வழியின்றிக் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில்தான் பா.ச.க.விற்கு மக்கள் வெற்றி வாய்ப்பைத் தந்தனர் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பு நிலைக்க வேண்டும் என்றால் இந்துமதக் கட்சி என்ற நிலைப்பாட்டிலிருந்து மாறி அனைத்து மக்களுக்கான கட்சியாகச் செயல்படவேண்டும்.
கிரண்(பேடி) முதல்வராக முன்னிறுத்தப்பட்டதால்தான் தோல்வியைத் தழுவியதாக உள்ளபடியே பா.ச.க. எண்ணினால் அதுவும் தவறுதான். இதுபோன்ற நேர்வுகளில் எக்கட்சியாக இருந்தாலும் சிறு சலசலப்பு இருக்கத்தான் செய்யும். ஆனாலும், கட்சித்தலைமையின் கொத்தடிமைகளாக இருக்கும் கட்சியினர் கட்சியின்பக்கமே நிற்பர். உண்மையில் அதுதான் காரணம் எனில் அவரைமட்டும் தோற்கடித்து விட்டுப் பிற இடங்களில் வெற்றியைத் தந்திருக்கலாம் அல்லவா? கிரண்(பேடி) அரசியல் கணிப்பில் தவறியுள்ளார் என்பதுதான் உண்மையே தவிர, அவரால்தான் பா.ச.க. மண்ணைக் கௌவியது என்பது தவறேயாகும். எனவே, பா.ச.க. தன் போக்கை அனைத்து மக்கள் நலனுக்காகவும் செயல்படும்வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
  தமிழ் நாட்டைப் பொருத்தவரை தமிழக மீனவர்கள் துயரத்தைப் போக்குவதுடன் சிங்கள அரசிடமிருந்து உரிய இழப்பீட்டைப் பெற்றுத்தரவேண்டும். ஈழத்தமிழர்களுக்குத் தமிழகச்   சட்டமன்றத் தீர்மானத்திற்கு இணங்க நீதி கிடைக்கவும் படுகொலையாளிகளும் கூட்டாளிகளும் தண்டிக்கப் பெறவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரசு போலவே அண்டைநாட்டுடனான நல்லுறவு என்ற போர்வையில் சிங்கள அரசுடன் கூடிக் குலவிக் கொண்டிருந்தால் இருந்த இடம் தெரியாமல் போக நேரிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  தில்லி மக்கள் காங்கிரசை இருப்பிடம் தெரியாத அளவிற்குத் தொலைந்துபோகச் செய்து விட்டார்கள். சிறிய வெற்றி கிடைத்திருந்தாலும் பா.ச.க.மீது கசப்பு ஏற்பட்டால் அதற்கு மாற்று நாம்தான் என்ற எண்ணத்தில் ஆட்டம் போடத் தொடங்கியிருப்பர். அதன் ஊழலுக்கும் மனிதநேயமற்ற செயல்களுக்கும் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கும் சரியான பாடம் தில்லித் தேர்தலில் கிடைத்து விட்டது.
  அதே நேரம் அரவிந்து(கெசுரிவால்) தனக்காகக் கிடைத்த வெற்றி என எண்ணிச் செயல்பட்டார் எனில் அடுத்த தேர்தலில் இவரும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார். எனவே, மக்கள் நல அரசாகச் செயல்படவேண்டும். தில்லியில் கணிசமான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் தமிழரைப்பற்றியோ அவர்களின் தாய்மொழியான தமிழின் சிறப்பையோ அங்குள்ள தமிழர்களின் இன்னல்களையோ   அங்குள்ள தமிழர்களின் உறவினர் வாழும் தமிழ் ஈழம் குறித்தோ அறியும் நாட்டம்கூட இல்லாதவராகத்தான்அரவிந்தர் (கெசுரிவால்) அரவிந்து(கெசுரிவால்) உள்ளார். இந்தப் போக்கையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டும்.மற்றவரை எதிர்ப்பதற்காக முன் நிறுத்தப்படும் யாரும் நிலைத்து நின்றதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
  வெற்றி பெற்ற அரவிந்தரையும் பிறரையும் வாழ்த்துகிறோம்! மீண்டும் தில்லி மக்களைப் பாராட்டுகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை


No comments:

Post a Comment

Followers

Blog Archive