Monday, April 7, 2014

இருபால் இளைஞர்களே! களம் புகுவீர்!

இருபால் இளைஞர்களே! களம் புகுவீர்!

election01
  நிகழும் சித்திரை 11, ஏப்பிரல் 24 அன்று நாடாளுமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதவி நடைபெறுகிறது. தமி்ழ் மக்களுக்கு எதிரானவர்களுக்குப் பாடம் புகட்டவும், தமிழ்நாட்டிலாவது தமிழ் வாழ வகை செய்வோருக்கு வாக்களிக்கவும் உரிய களமாக இதைக் கருத வேண்டும்.  அரசியல் ஊழல் கறை படியாத இருபால் இளைஞர்களும் மாணாக்கர்களும் தேர்தலில் முதல்முறை வாக்களிப்பவர்களும்  முயன்றால்  தவறான  பாதையில் செல்லும் நாட்டின் போக்கைத் திருப்ப இயலும். அதற்காக அவர்கள் முன் இரு  வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றைச் செயல்படுத்தினால் போதும்.

முதல் வழி தேர்தல் பரப்புரை
பின்வரும் பொருண்மைகளில் உறுதி மொழி அளிப்பவருக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு பகுதியிலும் உள்ளவர்கள் தத்தம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டாலே போதுமானது.
 election07
1)      தொடக்கநிலையில் இருந்து ஆய்வு நிலை வரையிலும் மருத்துவக்கல்வி, பொறியியல் கல்வி முதலான தொழிற்கல்வி முழுமையும் எவ்வகைக் கட்டணமின்றியே அளிக்கப்பட வேண்டும்.

2)      அனைத்து நிலைக் கல்வியகங்களிலும் தமிழ் மட்டுமே கல்வி மொழியாக நடைமுறைப்டுத்தப்பட வேண்டும். இதற்கு உடன்படாவிடில் மத்திய அரசின் அல்லது இதன் சார்பிலான கல்வியகங்கள் இயங்கத் தடை செய்ய்ப்பட வேண்டும்.

3)      அனைத்துப்பள்ளிகளிலும் தமிழ்ப்பாடம் கட்டாய முதல் நிலையில் இருத்தல் வேண்டும்.thamizhmozhi_thulanguka

4)      குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் பிறகு  பிற மொழிப்பாடங்களை எடுத்துத் தேர்ச்சி பெறும்  வாய்ப்பு தடை செய்யப்பட வேண்டும்.

5)      ஆங்கிலம் 6 ஆம் வகுப்பிலிருந்து கற்பிக்கப்பட்டால் போதுமானது. 

6)      9 ஆம் வகுப்பில் இருந்து பிற மொழிகளை விரும்புவோர் கற்க வாய்ப்பளித்தால் போதுமானது.
 election-education09
7)      பன்னாட்டுப் பள்ளியாக இருந்தாலும் படைத்துறைப்பள்ளியாக இருந்தாலும் தமிழ்வழிக் கல்வியை அளித்தல் வேண்டும்.


8)      மொழிச்சிறுபான்மையர் தங்கள் மொழியைக் கற்க விரும்பினால், தாய்மொழிக்கான சான்றினை அளிக்க வேண்டும்.

9)      மொழிச்சிறுபான்மையர் எத்தனை விழுக்காட்டில் உள்ளனரோ அந்த எண்ணிக்கைக்கு உட்பட்டுத்தான் மொழிச் சிறுபான்மை யருக்கான கல்வியகங்கள் இருக்க வேண்டும்.
 election-education08

10)   இட ஒதுக்கீட்டுச் சலுகை, தமிழ்நாட்டில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். பிற மொழியினர் பயன்படுத்த வாய்ப்பளிக்கக் கூடாது. பிற மொழியினர் தத்தம் அமைப்புகள் மூலம் இவர்களுக்கு உதவிகள் அளிக்கலாம்.

11)   இப்போதைய தனியார் கல்வி நிறுவனங்கள், கட்டணமில்லாக் கல்வி அளிக்க முன்வரவேண்டும்.  அதற்கு வாய்ப்பில்லாதவர்கள் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

12)   மாணாக்கர்களுக்குக் கல்வி உதவித் தொகைகள் உரிய காலங்களில் தரப்படுவதில்லை. முழுமையாகவும் அளிக்கப்படுவதில்லை. அனைவருக்கும்  கட்டாயக் கட்டணமில்லாக் கல்வி என்பது நடைமுறைக்கு வந்தவிட்டால் இது தேவையிருக்காது.  இருப்பினும் இத்தகைய தேவை உள்ள சூழல்களில் பள்ளியில் சேரும்பொழுதே தகுதி உள்ளவர்களுக்கு  உதவித்தொகை வழங்கப்படுவதை உறுதி செய்து விட்டு எவ்வகைக் கட்டணமும்  பெறாமல், உரிய தொகையை  கல்வி நிறுவனமே பெற ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
 election-education11
13)   கல்விக்கடனுக்கும் தேவையில்லாச் சூழல் வர வேண்டும். இருப்பினும் அத்தகைய நேர்வுகள் இருப்பின், ஆண்டுத் தொடக்கத்தில் முதலில் பணம் கட்ட வேண்டும் என்ற கடும் நடைமுறையை நிறுத்தி விட்டு, மாணாக்கருக்குத் தகுதி இருப்பின் நிறுவனமே கடனை எதிர்நோக்கி மாணாக்கரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 14)   துறைதோறும் தமிழில் நூல்கள் பெருக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 15)   தமிழக அரசு அலுவலகம்,பிற மாநில அலுவலகம், மத்திய அரசு அலுவலகம், தனியார்அலுவலகம், பன்னாட்டு நிறுவன அலுவலகம், அயலக அலுவலகம் என்ற பாகுபாடின்றித் தமிழ்நாட்டில் உள்ள  எல்லா அலுவலகங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.
 16)   இப்போது பணியாற்றுவர்களுக்குக்  குறைந்த கால  அளவு வாய்ப்பளித்துத் தமிழில் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும். இனிமேல் தமிழறிந்தவர்களை மட்டுமே யாராயினும் தமிழ்நாட்டில் பணியமர்த்த வேண்டும். எனினும் மாறுதல் போன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்குப் பணியாற்ற வருபவர்களுக்கு ஈராண்டு வாய்ப்பு அளித்து உரிய தமிழ்த் தேர்ச்சி பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
 17)   தமிழக அரசின் தலைமைப் பதவிகளிலும் அடுத்த நிலைப் பதவிகளிலும் தமிழறிந்த தமிழரையே அமர்த்த வேண்டும்.

18)   தமிழ்நாட்டிலுள்ள  தனியார் நிறுவனங்களிலும் பிற நிறுவனங்களிலும் 75% இற்குக்  குறையாமல்  தமிழ் மக்கள் பணியாற்றும் வகையில் பணியமர்த்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

19)   தமிழ்க்கொலை புரியும், திரைப்பட நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், இதழ்கள், இணையத் தளங்கள் முதலான அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டும். மீறுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
 20)   தமிழில் அயலெழுத்துகளையும் அயற் சொற்களையும் புகுத்துவோர் தண்டிக்கப்பட வேண்டும்.
 21)   மத்திய அரசு திட்டங்கள் என்ற பெயரில் இந்தி அல்லது சமசுகிருதப் பெயர்களில்  உள்ள வற்றின் பெயர்களைத் தமிழில் அறிவிக்க வேண்டும். இனி இங்கு பயன்பாட்டில் உள்ள திட்டங்கள் யாவும் தமிழ்ப் பெயர்களில்தான் இருக்க வேண்டும்.
 22)   தமிழின் செம்மொழித் தன்மையை ஏற்பதுபோல் ஏற்று விட்டு  மளிகைக்கடைப் பட்டியல்போல்பிற மொழிகளைச் சேர்க்கும் அவலம் உள்ளது. எனவே, காலத்தால் மூத்த தமிழின் சிறப்பை உலக மக்கள் அறியும் வகையில் எல்லா நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த்துறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
 23)   மது விலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  திரைப்படங்கள் முதலானவற்றில்election06 மது தொடர்பான காட்சிகள் இடம் பெறுவதற்கும் தடை செய்ய வேண்டும்.
 24)   கடலோரக் காவல் அணியைத் தமிழக அரசே அமை்த்து நம் நாட்டு மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும். சிங்களப்படை முதலான பிற படையினர்  நம் நாட்டு மீனவர்களைத் தாக்கினால், அவர்களுக்கு எதிராகக் கடலோரக் காவல் அணியினர்  எதிர்த்தாக்குதல் மேற்கொள்ள வேண்டும். மீனவர்களைத் தாக்கியோரைத் தளையிட்டு இழுத்து வந்து நீதி மன்றம் முன் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்.
  election-fishermen0125)   கச்சத்தீவை அறமுறையில்  மீட்க இயலாவிட்டால் படைமுறையில் மீட்க வேண்டும்.
 26)   ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம் என்ற பெயரிலான கொட்டடிகளில் அடைத்து வைப்பதற்கு முற்றுப்புள்ளி இட்டு, அவர்களைப் பிறர்போல் இயலபாக வாழ வகை செய்ய வேண்டும்.
 27)   உலக நாடுகள் தமிழ் ஈழத்திற்கு ஏற்பு அளிக்கவும் இனப்படுகொலையாளிகளைத் தண்டிக்கவும் பரப்புரை குழு ஒன்றை அமைத்து உலகெங்கும் சென்று இக்குழுவினர் தனி உரிமையுடைய தமிழ் ஈழ அரசு அமைக்க ஆதரவைப் பெற வேண்டும்.
 28)   இதன் தொடர்ச்சியாக உலக நாடுகளின் ஏற்புடன் 01.01.1600 இல் தமிழர் வாழ்ந்த பகுதிகள்  தமிழ் ஈழம் என அறிவிக்கப்பட வேண்டும்.
 29)   தமிழீழப்படுகொலைக்குக் காரணமான இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதலான படைத்துறையினர் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றில் இருந்து தமிழக மீனவர் குடும்பத்தினருக்கும் தமிழ் ஈழ அரசிற்கும் இழப்பீடு தர வேண்டும்.
 30)   சாலைகள்அரசின் கட்டடங்கள், முதலான யாவற்றிற்கும் காப்புறுதிக் காலம் அறிவிக்கப்பட வேண்டும். அதற்குள் இவை சீர்கேடடைந்தால் பொறுப்பில் இருந்த அதிகாரிகள், ஒப்பந்தர்கள், துறை அமைச்சர்களின் சொந்தச் செலவில்  சீர் செய்யப்பட வகை செய்ய வேண்டும். தொடர்பானவர்கள் இறந்திருந்தால், அவர்களின் மரபுரிமையரிடம் இருந்து செலவுத் தொகையைப் பெற வேண்டும்.
 31)   தமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் உயிர்நீத்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் மரபுரிமையருக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
 Muthukumaran03chinnasami01
32)   உணவுமருந்து முதலானவற்றில் கலப்படம் இருப்பின் இவற்றைத் தடுக்கும் பொறுப்பை மக்களிடம் சுமத்திக் கலப்படம் இருக்க வழிவகை செய்யக்கூடாது. விற்பனையாளர்கள், முகவர்கள், உற்பத்தியாளர்கள் தண்டிக்கப்படும் வகையில் சட்டம் உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.

33)   உணவுக்கடைகள், மருந்துக்கடைகள், துணிக்கடைகள் முதலான வற்றில்  விலைக்கட்டுப்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும்.

34)   அந்தந்தப் பகுதி சார்ந்த மின் நிறுவனங்கள் அமைத்து மின் சேமிப்பைப் பெருக்க வேண்டும்.

35)  கதிரொளி மின்சாரம் வீடுகள், அலுவலகங்கள் முதலான கட்டடங்கள், ஊர்திகள்  முதலானவற்றில்   பயன்படுத்தும் வகையில்  அவற்றின் உற்பத்தியைப் பெருக்க வேண்டும்.

36)   ஊர்ப்பகுதி, ஊராட்சி ஒன்றியப்  பகுதி ஆகியவற்றில் அந்தந்தச் சூழலுக்கேற்ற தொழிலகங்களை உருவாக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்.

37) அனைவருக்கும் கட்டாய இலவசக் கட்டணமில்லா மருத்துவம் அளிக்க வேண்டும். செல்வர்களிடமிருந்து நன்கொடை பெற்றுக் கொள்ளலாம்.

38)   வருமான வரியை மத்திய அரசு நீக்க ஆவன செய்ய வேண்டும். இல்லையேல்இங்குள்ள வருமான வரி அலுவலகங்களை மூடச்செய்துஅத்துறை மூலம் சம்பளம், முதலான அனைத்துச் செலவினங்களையும் தமிழ்நாட்டில் இருந்து பெறும் வரிவருவாயில் கழித்து எஞ்சிய தொகையை அரசே செலுத்த வேண்டும். வருமான வரிக்கு மாற்றாகத் தமிழக அரசு அவரவர் செல்வ நிலைக்கேற்ற வகையில் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், ஆய்வகங்கள் முதலான மக்களுக்குத் தேவையானவற்றை அமைத்துத் தர அல்லது இருப்பனவற்றின் புரவலராகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.

39)   இணைய வழிச் சான்றிதழ்கள் வழங்கும் பொழுது ஊழல் குறைகிறது. எனவே, அனைத்துவகைச் சான்றிதழ்களையும் இணைய  வழியில் எளிதில் வழங்கவும்அவற்றின் அச்சிட்ட படிகளை அஞ்சலில் உரியவருக்குக் கிடைக்கவும் வழி செய்ய வேண்டும்.

40)   அரசின் நலத்திட்ட உதவிகள் காலங்கடந்து வழங்கப்படுவதும் பல நேரங்களில் பெறும் உதவியை விட அளிக்கும் கையூட்டுகள் சேர்ந்து மிகுதியாக இருப்பதையும் காண முடிகிறது. எனவே, மிகக் குறைந்த கால இடைவெளிகளில் நலத்திட்ட உதவிகள் ஏற்கப்படவும் வழங்கப்படவும் ஆவன செய்ய வேண்டும்.

41)   நூலக வரி வீணாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.  மூன்று திங்களுக்கு ஒரு முறை தரமான நூல்கள் ஊழலின்றி வாங்கப்பட வேண்டும். நூலகங்கள் கணிணி மயமாக்கப்பட வேண்டும்.

42)   ஊர்கள் தோறும் மின்னூலகங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
43)   தொகுதி நிதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தொகுதியின் பெயர்தான் இருக்க வேண்டுமே தவிரதனியர் பெயர்கள் இருக்கக்கூடாது.

44)   அரசின் திட்டங்கள், வாழ்வோரின் பெயர்களில் அறிமுகப்படுத்தக்கூடாது. ஆள்வோர் பெயர்களில் அறிவித்து அவர்களின் படங்களை அரசின் செலவு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் விளம்பரப்படுத்தி விட்டுத் தேர்தல் காலத்தில் அவற்றை அழிக்கும் வகையில் மக்கள் வரிப்பணம் வீணாவது நிறுத்தப்பட வேண்டும். இது போன்ற சூழல் நேர்ந்தால் செலவினம் உரிய கட்சியிடமிருந்துபெறப்பபட  வேண்டும்.

45)   இடைத் தேர்தல் நடைபெறும்பொழுது உரிய தொகுதியின் மாவட்ட அமைச்சர் அல்லது அமைச்சர்கள் மட்டும் பங்கேற்கலாம்பிற அமைச்சரோ, முதலமைச்சரோ பங்பேற்பது தடை செய்யப்பட வேண்டும்.

46)   ஊழல் வழக்குகளும் தேர்தல் வழக்குகளும் ஓராண்டிற்குள் முடிக்கப்பட வேண்டும்.

   இவை போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உறுதி அளிப்போருக்கே வாக்களிக்கும்படி மக்களிடம் வலியுறுத்த வேண்டும். கட்சி வேட்பாளர்களாக இருந்தால், அத்தகைய உறுதியை அவர்கள் கட்சித் தலைமையிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்றும் வற்புறுத்த வேண்டும்.

  ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் இயல்பாகவே திட்டங்கள் சிலவற்றை நிறைவேற்றத்தான் செய்வார்கள். அவற்றை அரும் பெருஞ்செயல்களாகக் கூறிக் கொண்டிராமல், எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய, கல்வியிலும் நலவாழ்விலும் வேலை வாய்ப்புகளிலும் தொழில் துறைகளிலும்  சிறந்து விளங்கக்கூடிய நாட்டாகத் தமிழ்நாட்டை மாற்ற முயல்வோருக்கே வாக்களிக்க வேண்டும்.

  பொதுவான பரப்புரையை மேற்கொள்ளும் பொழுதே ஈழத்தில் தமிழின மக்களைப் படுகொலை செய்யச் சிங்கள நாட்டிற்கு உதவிய காங்கிரசு என்னும் பேராயக் கட்சிக்கு வாக்களிக்காமல் இருக்க மக்களிடம் வலியுறுத்த வேண்டும்.   நாம் அளிக்கும் வாக்கு அவர்களை ஊக்கப்படுத்துவதாக அமையும் என்பதை மனத்தில் நினைத்து அவர்களைத் தேர்தல் மூலம் தண்டிக்க வேண்டும்.

  தொகுதியில் போட்டியிடுவோரில் உண்மையான மக்கள் பற்றாளராகவும் மொழி, இனப் பற்றாளராகவும் நேர்மையாளராகவும்  இருக்கக்கூடியவர்களைக் கண்டறிந்து அவர்களை அடையாளம் காட்டலாம். எனினும் வாய்ப்பேச்சில் மயங்கிக் கொலைகாரருக்கும் கொள்ளைக்காரருக்கும் வாக்களிக்குமாறு செய்யக் கூடாது.

இரண்டாம் வழி நேரடியாகத் தேர்தலில் பங்கேற்பு

   இளைஞர்களே நேரடியாகத் தேர்தலில் பங்கேற்கலாம்.அனைத்துத் தொகுதிகளில் இயலாது என்றாலும் சில தொகுதிகளிலாவது போட்டியிட்டு விழிப்புணர்வை  உண்டாக்கலாம். சோனியா, இராகுல், அவர்களின் குடும்பத்தினர், அக்கட்சியில் மேல் மட்டத் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட்டு மனித நேயத்திற்கு எதிரான அவர்களின் படுகொலைச் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்தலாம். அல்லது இவர்களின்  தொகுதிகளில் போட்டியிடச் சூழல் இடந் தரவில்லை யெனில், அங்கே போட்டியிடும் தனி வேட்பாளர்களில் மனித நேயம் மிக்க ஒருவரை  அடையாளம் கண்டு அவருக்கு ஆதரவாக  வாக்கு கேட்டுஇனப்படுகொலைகாரர்களைத் தோற்கடிக்கலாம். தேர்த்லில் வெற்றி கிடைக்காவிட்டாலும் இதனால் ஏற்படும் விழிப்புணர்வும் பெறப்போகும் வாக்குகளும் வெற்றிக்கு அடையாளமே!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரைfeat-default

No comments:

Post a Comment

Followers

Blog Archive