Friday, April 22, 2011

andre' sonnaargal 50 - buildings 12 :அன்றே சொன்னாரகள் 50 - கட்டடங்கள் 12

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : April 22, 2011





மிகச் சிறந்த கட்டட அமைப்பிற்குச் சான்றாக நெடுநல்வாடை இலக்கியம் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கும் முன்னர், வீடுகளோடு தொடர்புடைய செடி, கொடி, மரம், கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு குறித்துச் சிறிது பார்ப்போம்.
வீடுகள் கட்டட அறிவியலுக்கு எடுத்துக்காட்டானவை. எனினும் மரம், செடி, கொடிகளையும்    பறவையினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்கும் தோட்ட அறிவியல், பறவையியல், விலங்கியல் முதலான பிற அறிவியலுக்கும் ஏற்பவே வீடுகள் அமைக்கப்பட்டன. எனவே, அவை குறித்து  வீடுகளின் தொடர்ச்சியாகக் காண்பதும் பொருத்தமானதே.
நல்ல காற்றிற்காகவும் உணவுப் பொருள் தன்னிறைவிற்காகவும் வீடுகளில் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை முற்றங்களில் பூச்செடிகளாகவும் கொடிகளாகவும் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் தோட்டமாகவும் தோப்பாகவும் அமைந்திருந்தன. வீடுகளில் வளர்க்கப்படும் மரத்தை  மனைமரம் எனப் புலவர் மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார் (அகநானூறு 58.13), புலவர் பாண்டரங் கண்ணனார் (புறநானூறு : 16.5) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.


வீட்டின் நடுவே உள்ள முற்றத்தில் முல்லை வளர்க்கப்பட்டமையைப் புலவர் ஒருவர்
மனைநடு மௌவல் (நற்றிணை 115.6 ) என்கிறார்.
வீட்டில் நொச்சி வளர்க்கப்பட்டமையைப் புலவர் காவன் முல்லைப் பூதனார்
மனைஇள நொச்சி ( அகநானூறு : 21.1) என்றும் புலவர் காப்பியஞ்
சேந்தனார்
மனைமர நொச்சி (நற்றிணை : 246.3) என்றும் பரணர்
மனைவளர் நொச்சி (அகநானூறு : 367.4) என்றும் குறிப்பிடுகின்றனர்.
வயலை வளர்க்கப்பட்டமையைப் புலவர் மருதம்பாடிய இளங்கடுங்கோ
மனைநகு வயலை (அகநானூறு: 176.13) என்றும் புலவர்  ஓரம்போகியார்
மனை நடு வயலை (ஐங்குறுநூறு : 11.1) என்றும் குறிப்பிடுகின்றனர்.

புலவர் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் வீட்டிற்கு முன்பக்கம் முற்றம் அமைக்கப்பட்டு அதில் பூஞ்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார். அம் முன்முற்றம் குரவை ஆடும் வகையில் இடப்பரப்பு உடையதாகவும் இருந்துள்ளது. இவற்றை
மணி ஏர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியல்அறை வரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும் (அகநானூறு: 232.8-10)
என்னும் வரிகள் தெரிவிக்கின்றன.
(வீட்டு முற்றத்தில் பொன்போன்ற பூக்கள், மணியைப் போன்று அரும்புகளாக மலர்ந்து உள்ளன. அவை கீழே விழுந்து பரவி அகலமான பாறைகளை அழகுபடுத்துகின்றன. அதில் குறவர்கள், அவ்வீட்டில்  உள்ள ஆடலில் வல்ல மகளிரோடு குரவை ஆடுவர். அறை – பாறை.)
வீட்டுத் தோட்டத்தில் மிளகுக் கொடி வளர்த்துள்ளனர்; குடிலின் இறவாணம் குறுகியதாக உள்ளது. இக்கருத்தை மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
குறுகல் நண்ணிய கறிஇவர் படப்பைக்
குறிஇறைக் குரம்பை நம் மனை (அகநானூறு: 272.10-11)
எனக் குறிப்பிடுகிறார்.
(கறிஇவர்-மிளகுக் கொடி படர்ந்த; குறிஇறைக் குரம்பை-குறுகிய இறையை (இறவாணத்தை) உடைய குடில்)
புன்னை மரங்கள் வளர்க்கப்பட்டதைப் புலவர் மோசிக்கரையனார்
பொழில்மனைப் புன்னை (அகநானூறு  260.8) என்கிறார்.
சுவையான பழம்தரும் இரவமரத்தின் தழைகளுடன் வேப்ப மரத்தின் இலைகளையும் வீட்டின் இறவானத்தில் செருகி வைப்பதைப் புலவர் அரிசில் கிழார்,
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ (புறநானூறு  : 281.1) எனக்
குறிப்பிட்டுள்ளார்.

பொதுமன்றத்தில் உள்ள விளாமரத்தின் பழம் வீட்டருகே வீழ்ந்ததைப் புலவர் கருந்தும்பியார்,
மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில் (புறநானூறு:181.1) எனக்
குறிப்பிட்டுள்ளார். (வெள்ளில் – விளாம்பழம்)
ஒவ்வொரு நாட்டிலும் காவல் மரம் என ஒன்றை வளர்த்து அதற்கு முதன்மை கொடுத்து வந்தனர். அரண்மனையில் வளர்க்கப்படும் காவல் மரம் என்பது அரசரின் வெற்றியின் அடையாளமாகக் கருதப்பட்டது. புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் (கடிமரம் தடிதல் ஓம்பு : புறநானூறு 57:10),  புலவர் கல்லாடனார் ( கடிமரந் துளங்கிய காவும் :  23: 9-10) ஆகியோர் பகைநாட்டின் காவல்மரம் குறித்துக் கூறியுள்ளனர். (வேந்தர் வளர்க்கும் காவல்மரம் போன்றே நம் முன்னோர்கள், ஒவ்வொரு கோயிலிலும் தல மரம் என ஒரு மரத்தை வளர்த்துச் சுற்றுப்புற அறிவியலில் கருத்து செலுத்தி உள்ளனர். இப்பழக்கம் இன்றுவரையும் கோயில்களின் உள்ளமையை நாம் காணலாம்.)
பயிரறிவியல் குறித்துத் தனியாக விரிவாக ஆராயும் அளவிற்குச் செய்திகள் உள்ளன. ஆனால், வீட்டில் மரங்கள் வளர்க்கும் அளவிற்கும் தோட்டங்கள் அமைக்கும் அளவிற்கும் கட்டடங்கள் அமைக்கப்பட்டன என்பதால் இங்கே அவை பார்க்கப்பட்டன. இப்பொழுதோ இட நெருக்கடி என்ற பெயரில் ஒவ்வொரு வீடும் ஒன்றை ஒன்று ஒட்டிக்கொண்டு மர வளர்ப்பிற்கு இடமில்லாமல் அமைக்கப்படுகின்றன!

No comments:

Post a Comment

Followers

Blog Archive