Thursday, December 30, 2010

science in kurunthogai 1/5: Kurunthogai kuurum ariviyal seydhi 1/5


குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள்


- இலக்குவனார் திருவள்ளுவன்

          பழந்தமிழர்கள் அறிவியலிலும் சிறந்து விளங்கியுள்ளார்கள் என்பது நமக்குக் கிடைத்துள்ள இலக்கியங்களில் இருந்தே நன்கு புலனாகின்றது. சங்க இலக்கியங்களில் உள்ள சில வானியல் செய்திகளையும் அறிவியல் விதிகளையும் வேளாண்மைச் செய்திகளையும் திரும்பத் திரும்பக் கூறுகிறோமே தவிர, சங்கக் கடலில் புதைந்துள்ள அறிவியல் வளங்களை முழுமையாக இன்னும் வெளிக் கொணரவில்லை. அறிவியல் தமிழ்க் கருத்தரங்கங்கள் இத்தகைய முயற்சிகளுக்குத் துணைநிற்பது பாராட்டிற்குரியது.

          சங்க இலக்கியங்களில் உயிரியல் செய்திகள் மிகுதியாக உள்ளன. பொதுவாகப் பயிரியல் விலங்கியல்களில் தோற்றம், வகை, வண்ணம், செயல்பாடுகள், பயன், ஒப்புமை அல்லது வேறுபாடு, வளரிடம், சூழ்நிலை, உறுப்புகள், இனப் பெருக்க முறை, இடப்பெயர்ச்சி முதலானவை பற்றித்தான் படிக்கிறோம். இவற்றைக் குறிக்கும் அறிவியல் நூல்கள் பழந்தமிழகத்தில் மிகுதியாக இருந்திருக்க வேண்டும். நமக்கு அவை கிடைக்கவில்லை என்பதாலேயே இத்தகைய அறிவு வளம் அவர்களிடம் இல்லை என எண்ணுவது தவறாகும். இத்தகைய அறிவியல் நூல்கள் நமக்குக் கிடைக்காவிட்டாலும், நமக்குக் கிடைத்துள்ள இலக்கிய நூல்களில் உள்ள பெயர்களும் செய்திகளுமே போதிய அறிவியல் செய்திகளை உணர்த்துகின்றன. செடி கொடி காய் கனி மரம் பறவை விலங்கு முதலானவை பற்றிய அடைமொழிகள் நமக்குப் பல அறிவியல் செய்திகளை உணர்த்துகின்றன. பொது மக்களுக்கான இலக்கியங்களிலேயே அறிவியல் செய்திகள் பரவலாக இருந்திருக்கின்றன என்றால், மூல அறிவியல் நூல்களில் மண்டிக்கிடந்த அறிவியல் வளத்தை நம்மால் உய்த்துணரக்கூட இயலாது. இவை போன்ற அறிவியல் உண்மைகள் ஆங்கிலம் முதலான பிற மொழிகளில் இருந்தால் அறிவியலாகப் போற்றும் நம்மால், நம் மொழியில் எளிமையாக இருக்கின்ற காரணத்தாலேயே அறிவியலாக ஏற்றுக் கொள்ள இயலாமல் போகிறது. இத்தகைய எண்ணத்தைப் புறந்தள்ளிவிட்டு, இக்கட்டுரையைப் படித்தால் நம் அறிவியல் வளம் நன்கு புரியும்.

                        பெருமழைப் புலவர் சோமசுந்தரனார் குறிப்பிடுவது  போன்று சமசுகிருதம் முதலான பிற மொழியாளர்கள் பாற்கடல் முதலிய அறிவுக்குப் பொருந்தாதக் கதைகளையும் பல்லாயிரம் ஆண்டு வாழ்ந்ததாகவும் பதினாயிரம் மகளிரை மணந்ததாகவும் பொருந்தாப் புனைவுகளையும் இலக்கியம் என்ற பெயரில் படைத்துள்ளனர். ஆனால், நம் சங்க இலக்கியங்களோ இயற்கை தழுவிய வாழ்வியலை விளக்குகின்றன. எனவே, உயிரினங்கள் இயல்பான சொல்லாட்சிகளைப் பெற்று பாடல்களுக்கு அணிசேர்க்கின்றன. இத்தகைய உயிரினங்களைக் குறிக்கையில் அவர்கள் கையாளும் அடைமொழி அல்லது உவமைச் சிறப்பு போன்றவை முற்றிலும் அறிவியல் உண்மைகளாகவே உள்ளன. வண்ணம், வடிவு முதலான அறிவியல் செய்திகளை வெறும் குறிப்பாக எண்ணாமல் அறிவியல் நோக்கிலேயே காண வேண்டும்.

  
          சங்கக் கடல் முழுவதையும் இப்பொழுது காணப் போதிய நேரம் இல்லை என்பதால், ரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாக, இங்கே நாம் குறுந்தொகையை மட்டும் காண்போம்.

          எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நல்ல குறுந்தொகையை முடித்தவர்  என்னும் குறிப்பு இருப்பினும் தொகுப்பித்த நல்லுள்ளத்தவர் பெயர் தெரியவில்லை. 205 புலவர்கள் பாடிய பாடலின் தொகுப்பான இதில் பதின்மர் பெயர் தெரியவில்லை. சொல்லமைதி, உவமைச் சிறப்பு, செய்யுள் நுணுக்கம் கொண்ட இப்பாடல்களில் கூறும் பொருள் நன்கு புலப்படும் பொருட்டுக் கையாளப்பட்ட அடைமொழிகள் எதுகை மோனைகளின் பொருட்டுச் சேர்க்கப்பட்டவையல்ல. காட்சிச் சித்திரமாக உள்ளத்தில் பதியும் வண்ணம் கூறப்பட்டுள்ள அடைமொழிகள் அறிவியல் செய்திகளே என்பதற்கு ஒரே ஓர் எடுத்துக்காட்டு மட்டும் பார்ப்போம்.நீ மென்சிறை வள்ளுகிர்ப் பறவை வௌவாலைக் குறிப்பிடுகையில் நிறம், சிறகின் மென்மைத் தன்மை, நகத்தின் வன்மைத் தன்மை முதலியன விளக்கப்படுகின்றன. இவற்றை நாம் உரைநடையில் - குறிப்பாகப் பிற மொழிகளில் படித்தால் அறிவியல் என்போம். ஆனால், பாடலில் வருவதால் இன்பச் சுவையாகக் கருதி விடுகிறோம். இவ்வாறான ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கிக் கூறாமல், குறிப்புகளை மட்டும் நாம் காண்போம்.
           

குறுந்தொகையில் அத்தி (அதவம்), ஆல் (ஆலம்), இற்றி, உகாய், ஓமை, கண்டல், காஞ்சி, குரவம், கொன்றை, ஞாழல், ஞெமை, தாழை (கைதை), நெல்லி, நொச்சி, பலா (பலவு) பனை (பெண்ணை, போந்தை,) புளி, புன்கு, புன்னை, மரா, மருது, மா (கொக்கு), மூங்கில் (வேரல், கழை, அமை, வேய்), யா, வாகை (உழிஞ்சில்), வாழை, வேங்கை, வேம்பு முதலிய மரங்களைப் பற்றியும் எருக்கு, கரும்பு, கள்ளி, காந்தள், கூதாளம் (கூதளி), சேம்பு, நெருஞ்சி, பருத்தி (ரீPஇ), முண்டகம் ஆகிய செடிகளைப் பற்றியும்  அடும்பு, அவரை, அறுகு, ஆம்பல், தாமரை, பகன்றை, பிரப்பங்கொடி, பீர்க்கு, மாணை, மிளகு (கறி), முல்லை ஆகிய கொடிகளைப் பற்றியும் அடுப்பம் ஆம்பல், இருப்பை, ஈங்கை, எருக்கு, கரும்புப் கருவிளை, காஞ்சி, காந்தள் (கோடல், தோன்றி), காயாம் குரவம், குவளை, குறிஞ்சி, கூதாளம், கொன்றை, கோங்கு, ஞாழல், தாமரை, தாழம் நரந்தம், நெய்தல், நெருஞ்சி, பகன்றை, பாதிரி, பிச்சி (பித்திகம்), பிடவம், பீரம், புன்கு, புன்னை, மல்லிகை (குளவி), மாம்பூ,  முருக்கம்பூ, முல்லை, முண்டகம், வாகை, வெட்சி, வேங்கை, வேப்பம் ஆகிய மலர்களைப் பற்றியும்உழுந்து, எள், தினை (ஏனல்), நெல் (ஐவனம்), பயறு ஆகிய கூலங்கள் (தானியங்கள்) பற்றியும் அத்தி (அதவம்), பலா (பலவு), பிரப்பங்கனி, மா, வேப்பம்பழம் ஆகிய பழங்கள் பற்றியும் அணில், ஆடு (மறி),ஆமை,எருமை, எலி, எறும்பு, ஓந்தி, காளை (ஏறு, ஒருத்தல்), குதிரை (மா), குரங்கு (கடுவன், மந்தி, முசு, மயிர்க்கலை, ஊகம்), செந்நாய், தவளை, தேரை, நண்டு, நாய் (ஞமலி), நீர்நாய், பசு (, ஆன், கறவை, செருத்தல்), பல்லி, பாம்பு (அரா, அரவு), புலி,  (வெருகு), மான் (இரலை, உழை, வருடைமான், கலை, நவ்வி, மரை), முதலை, யானை (களிறு, பிடி, வேழம், நெடுங்கைவன்மான்)  முதலிய பல வகை விலங்குகள் பற்றியும் அன்றில், அன்னம், காக்கை, கிளி(கிள்ளி), குயில், குருகு (நாரை),குருவி, கூகை, கொக்கு, கோழி (கானங்கோழி, சேவல்), தும்பி (வண்டு, சுரும்பு), பருந்து, புறா (புறவு),  (காடை), மயில் (தோகை, மஞ்ஞை), வாவல் (வௌவால்) முதலிய பறவைகள் பற்றியும் அயிரை, ஆரல், இறால் (இறவு), கெண்டை, சுறா (கோட்டு மீன்), வாளை ஆகிய மீன்கள் பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
         
     பெரும்பாலானவை நேரிடையான பொருளில் வந்தாலும் சில அடிகள் பாடல் மூலம் புரிந்து கொள்ளத் தக்கவாக இருக்கும். அத்தகைய  அடிகளை மூலப் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். உயிரினங்களிடையே காட்டும் ஒப்புமை இரு துறை அறிவையும் புலப்படுத்தும். எனவே, உவமைகளை இருதுறை அறிவியல் செய்தியாகக் காண வேண்டுகிறேன். முதலில் பயிரியல் குறித்தும் பின்னர் விலங்கியல் குறித்தும் காண்போம்.


1. அடும்பு

அடும்பின் இலை, மானின் காலடி போன்று பிளவுபட்டதாக இருக்கும்.

மானடியன்ன கவட்டிலை
நம்பி குட்டுவனார்: குறுந்தொகை: 243:1


அடும்பங்கொடி மணலில் படரும்.

அடும்புஇவர்
உலோச்சனார்: குறுந்தொகை:284:5

2.அத்தி (அதவம்)

அத்தி மரக் கொம்புகள் வெண்மையாய் இருக்கும்.

வெண்கோட்டு அதவத்து
 எழுகுளிர் மிதித்த ஒரு பழம் 

(அதவம் - அத்தி மரம்: எழுகுளிர்- ஊரும் நண்டுகள்)
பரணர்: குறுந்தொகை: 24:3-4
அத்தி (அதவு)
அத்தி மரக் கிளைகள்  வெண்மையாய் இருக்கும்.

வெண்கோட்டு
பரணர்: குறுந்தொகை: 24:

3. அவரை

ஒருமுறை தினையை விளைவித்து அறுத்து மறுமுறை அவரை விதைப்பர்.
            
              சிறுதினை மறுகால்
கொழுங்கொடி அவரை
கடுவன் மள்ளனார்: குறுந்தொகை:82:4-5

அவரை மலர் கிளியின் அலகு போன்று இருக்கும் ; பலவாகப் பூக்கும்
          அவரைக்
கிளிவாய் ஓம்பின் ஒளிவிடு

கொல்லனழிசியார்: குறுந்தொகை: 240:1-2


4. அறுகு

அறுகம்புல், நீலமணிபோல் ஒளிவீசும் கொடிகளையுடையது. கிளைகள் மெல்லியனவாய் இருக்கும்; இலைகள் தோறும் வேர்கள் இருக்கும்; அவை நிலத்துடன் பிணிக்கப்பட்டிருக்கும். இவற்றை மான் இனந்தின்னும். 

மணிவார்ந்துஅன்ன மாக்கொடி அறுவை
பிணிகால் மென்கொம்பு பிணையொடும் ஆர்ந்த

(புலவர் பெயர் தெரியவில்லை)  குறுந்தொகை:256:1-3
(மாக்கொடி-கரிய கொடி; ஆர்தல்-வயிறு நிறைய மேய்தல்/உண்ணுதல்)


5. ஆம்பல்

ஆம்பல்  வாடிய நிலை குருவியின் குவிந்த சிறகுகள்போல இருக்கும்.

ஆம்பல்  சாம்பலன்ன
கூம்பிய சிறகர் மனையுறை
மாமலாடனார்: குறுந்தொகை: 46:1-2
(சாம்பல் -  பூவின் வாடிய நிலை ; குரீஇ - குருவி)



ஆம்பல் கொக்கின் முதுகு போன்று குவிந்து இருக்கும்.

பைங்கால் கொக்கின் புன்புறத்தன்ன
குண்டுநீர்
ஓரம்போகியார்: குறுந்தொகை: 122:1-2

ஆம்பலின் தண்டு, தொளையுள்ளதாயும் திரட்சி பொருந்தியும் இருக்கும்.

தூம்புடைத் திரள்கால்
ஆம்பல்
நெடும்பல்லியத்தையார்:  குறுந்தொகை: 178:2-3

ஆம்பல் இலை யானையின் செவிபோல் இருக்கும்.

களிற்றுச் செவியன்ன
கபிலர்:  குறுந்தொகை: 246:2
6. ஆல் (ஆலம்)
ஆல் மிகுதியான ஆண்டுகள் வாழும்

தொன்முது ஆலம்’
ஔவையார்: குறுந்தொகை: 15-2


7. ஆவிரைமலர்

ஆவிரை மலர் பொன்நிறத்தில் இருக்கும்.

பொன்னேர் ஆவிரை
மதுரைக் காஞ்சிப் புலவன்:  குறுந்தொகை: 173:1





8.இருப்பை

இருப்பைப் பூ   வெண்ணிறமாக இருக்கும்; வேனில் காலத்தில் பூக்கும்; காம்புகள் நீண்டதாக இருக்கும்.

கானஇருப்பை வேனல் வெண்பூ  
வளிபொரு நெடுஞ்சினை
ஓதலாந்தையார்: குறுந்தொகை: 329:1-2


9. இற்றி

இற்றி மரத்தின் வேர்கள் வௌ்ளையாய் இருக்கும். மற்றொன்றைப் படர்ந்தே வளரும் இயல்பு உடையது. இதனை இச்சி மரம் என்றும் கூறுவர்.

புல்வீழ் இற்றிக் கல்லிவர்
(கபிலர் :  குறுந்தொகை: 106-1)


10. ஈங்கை

ஈங்கை நுண்ணிய முட்களை உடையதாய் இருக்கும்.

நுண்முள் ஈங்கை
கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை: 110:5

11. உகாய்

உகாய் மரத்தின் அடிப்பகுதி புறாவின் முதுகுபோல் இருக்கும். இதன் கனிகள் நீல மணி போன்று இருக்கும்.

புறவுப் புறத்தன்ன புன்கால் உகாஅய்க்
 காசினை யன்ன நளிகனி
(உருத்திரனார்:  குறுந்தொகை: 274:1-2)

 புல்லரை உகாய்
செல்லூர்க் கொற்றனார்: குறுந்தொகை:363:3
12. உழுந்து

உழுந்தின் தாள் குறும்பூழ்ப் பறவையின் கால் போன்று இருக்கும்.
உழுந்து பனிக்காலத்தில்  காய்க்கும்.
உழுந்தின் முதிர்ந்த காய்களை மானினம் உண்ணும்.

பூழ்க்கால்  அன்ன செங்கால் உழுந்து
ஊழ்ப்படு முதுகாய் உழையினம் கவரும்
அரும்பனி அச்சிரம்

அள்ளூர் நன்முல்லையார்: குறுந்தொகை: 67: 1-3
(உழை-மான் ; அச்சிரம்-முன்பனிக்காலம்)
13. எருக்கு

எருக்கம் பூவின் அரும்பு குவிந்து இருக்கும்.

 குவிமுகிழ் எருக்கம்;
பேரெயின் முறுவலார்: குறுந்தொகை: 17:2
14. எருவை

எருவை (கொறுக்கைச்சி)யை யானை உண்ணும்.

நாட்குரல் எருவை
 கயன்ஆடி யானை கவளம் மாந்தும்
கருவூர் கிழார்: குறுந்தொகை:170:2
 

 15. எள்

எள் செடிக்கு மழை கூடாது. அவ்வாறு பெய்தால் காய்கள் கெட்டுப் போய்ப் பயன்தராமல் போகும். மழையில் நனையும் காயின் உள்ளேயுள்ள எள், உரிய பக்குவத்தை இழந்து உருவின்றி வீணாகி விடும். ஆனால், வெளிப் பார்வைக்குக் காய்மட்டும் தெரியும். இவ்வாறான பொய்க்காய் அல்லது பொக்கு என்பது சிதட்டுக் காய் எனப்பட்டது. சிதடு என்றால் குருடு எனப் பொருள். இதனைக் குருட்டுக்காய் என்றும் சொல்லுவர். ஊமைக்காய் என்பாரும் உள்ளனர்.



16.  ஓமை

ஓமைமரம் பொரிந்த அடியையும் நீண்ட கொம்பையும் உடையது.
இதன் பட்டையைக் காட்டு யானை விரும்பி உண்ணும்.

கான யானை தோல் நயந்து உண்ட
 பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை
குடவாயில் கீரத்தனார்:  குறுந்தொகை: 79:1-2

பாலைநிலத்தில் ஓமை மரங்கள் கருகி, குடியிருக்கும் ஊர் பாழ்பட்டது போன்ற தோற்றமளிக்கும்.

ஊர்பாழ்த்தன்ன ஓமை
பாலைபாடிய பெருங்கடுங்கோ: குறுந்தொகை: 124:2 

ஓமைமரத்திற்கு அழகான கிளை இருக்கும்.
ஓமை அம் கவடு
உறையனார்: குறுந்தொகை: 207:2

புல்லிய அடிப்பகுதியை உடையது ஓமை.

புன்தாள் ஓமை
கல்லாடனார்: குறுந்தொகை: 260:8

பாலை நிலத்தில் நீர் வேட்கையைத் தணிக்க யானை தன் மருப்பால் ஓமை மரத்தைக் குத்தும். (உலர்ந்த ஓமையைக் குத்துவதால், நீர் காணாது ஏக்கமுறும்.)
ஓமைகுத்திய உயர்கோட்டு ஒருத்தல்
கயமனார்: குறுந்தொகை:396:4
(ஒருத்தல்-யானை)

17. கடப்ப மரம்
 வலப்பக்கத்தே சரிந்த இதழையுடையது. இதன் கொம்பு, வேனில் காலத்தில் மணக்கும்.

                    வலஞ்சுரி மராஅத்து
 வேனில் அம்சினை கமழும்
சேரமானெந்தை:  குறுந்தொகை: 22:3-4
(மராம் - கடப்ப மரம்)


18. கண்டல்
கண்டல் என்னும் தாழையின் வேர்ப் பகுதியில் நண்டு வளை அமைக்கும்
                            ஞெண்டு
கண்டல் வேரர்அளைச்
செலீ,யர்

குன்றியனார்: குறுந்தொகை: 117:2-3
(கண்டல்-தாழை)
கடற்கரையில் மலர்கள் நிறைந்து கண்டல் என்னும் தாழைகள் வளரும்.

அழுவம் நின்ற அலர்வேய் கண்டல்
அம்மூவனார்: குறுந்தொகை: 340:4


19. கரும்பு

கரும்பு இனிமையாயும் இதன் பூ மணம்அற்றும் வெண்மையாயும் இருக்கும்.
தேம்பொதிக் கொண்ட தீங்கிழைக்
 கரும்பின் நாறா வெண்பூ
வடம வண்ணக்கண் தாமோதரனார்:  குறுந்தொகை 85:4-5


கரும்பு நடுகின்ற பாத்தி, யானைகளின் காலடிச் சுவடு போல் இருக்கும்.

கரும்பு நடு பாத்தியன்ன
 பெருங்களிற்று அடிவழி
பாலை பாடிய பெருங்கடுங்கோ:  குறுந்தொகை:  262:7-8

கரும்பின் அடிப்பகுதி மிகவும் இனிக்கும்.

                                     கரும்பின்
கால்எறி கடிகைக் கண்ணயின்று அன்ன
. தீநீர். .
காலெறி கடிகையார் : குறுந்தொகை : 267:2-4 
(காலெறிக் கடிகை: அடிப்பகுதியில் வெட்டப்பட்ட துண்டம்)





கரும்பின் குவிந்த அரும்பு, கருக்கொண்ட பச்சைப் பாம்பினது சூலினைப் போன்று இருக்கும்.

சினைப்பசும்பாம்பின் சூன்முதிர்ப்பு அன்ன
 கனைத்த கரும்பின் கூம்பு
கழார்க்கீரனெயிற்றி: குறுந்தொகை: 35:2-3

கரும்பின் பூ வெண்ணிறமானது
வான்பூங் கரும்பு

வௌ்ளிவீதியார்: குறுந்தொகை: 149:3

20. கருவிளை
கருவிளை மலரில் மயிலிறகின் கண்களைப் போல் அழகிய புள்ளிகள் இருக்கும்.

பீலி ஒண் பொறி
கிள்ளி மங்கலங்கிழார்: குறுந்தொகை: 110:4

(தொடர்ச்சிப் பகுதிகளை 2/5, 3/5, 4/5, 5/5 ஆகியவற்றில் காண்க.)

No comments:

Post a Comment

Followers

Blog Archive